ஞாயிறு, 14 ஜூன், 2015

மலாலா - 3

தாலிபான்கள்
90களில் ஆப்கானிஸ்தான் முழுதும் ஏராளமான தீவிரவாதக் குழுக்கள்  தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன.
தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்பதுபோல் ஒவ்வொரு வரும் அவரவர் வலிமைக்கேற்ப பல பகுதிகளை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து ஆண்டு கொண்டி ருந்தார்கள்.
அவர்களுடைய ஆளுகைக்கு உட் பட்ட பகுதியில் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற அவல நிலையே இருந்தது.
தீவிரவாதக் குழுக்களுக்கிடையே அவ்வப்போது சண்டைகளும், உயிர்ப்  பலிகளும் உண்டு.
ஆப்கானிஸ்தான் முழுவதையுமே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஷரியத் சட்டப்படி நல்லாட்சி புரியவேண்டுமென்று விரும்பியவன் ஓமர்.
ஒருநாள் அவன் தனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து தன்னுடைய குழுவிற்குத் தேவையான ஆயுதங்களை வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான்.
வழியில் இருந்த  கிராமம் ஒன்றில் இரண்டு பெண்களை தீவிரவாதிகள் பாலியல் பலாத்காரம் செய்வதை நேரில்  கண்டு துடித்தான். அந்தப் பெண்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும் என்று அவன் நினைத்தபோதும் ஆயுதங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அவனைத் தடுத்தது.
தன் கையிலிருந்த ஆயுதங்களைக் கொண்டுபோய் இருப்பிடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு இயக்கத்தின் ஆட்களுடன் திரும்பி வந்து பார்த்தபோது தீவிரவாதிகள் அந்தப் பெண்களை சின்னாபின்னமாக்கி குப்பைபோல் வீசிவிட்டுச் சென்றிருந்தார்கள்.
அவர்கள் சென்ற வழியிலேயே பின்தொடர்ந்த ஓமர் அவர்களில் ஒருவரைக்கூட விட்டு வைக்கவில்லை. அத்தனை பேரையும் கட்டியிழுத்துக் கொண்டுவந்தான். அந்தப் பெண்கள் துடிதுடித்த இடத்திலேயே நிற்கவைத்து ஆசைதீரச் சுட்டுப் பொசுக்கினான்.
கிராம மக்களின் கண்முன்னே அவர்களுக்கு அவன் வழங்கிய தண்டனை அவனை  ஹீரோவாக்கியது.
அதன்பின்னர்தான் ஓமரின் புகழ் ஆப்கானிஸ்தான் மக்களிடையே பரவியது.
ஆப்கானிஸ்தானில் இருந்த மற்ற தீவிரவாதக் குழுக்கள் அனைத்தும் யார் இவன்?’ என்று  தங்கள் பார்வையை அவன்மீது திருப்பின.
கந்தஹாருக்கு அருகே நொடே என்னும் கிராமத்தில் ஹோடக் ஆதிவாசிப் பிரிவில் உள்ள துரானி பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவன் ஓமர்.
அந்த காலகட்டத்தில் பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் ஆட்சி திவ்யமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
பாகிஸ்தானில் இருந்து கிளம்பும் சரக்கு வண்டிகள் மத்திய கிழக்கு நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் போன்ற இடங்களுக்குச் செல்வதென்றால் ஆப்கானிஸ்தானைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
அங்கேதான் பிரச்சனை தொடங்கியது.
ஒரு லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடங்கும் டிரைவர்களை ஆங்காங்கே ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் வழிமறிக்கும்.
பணம் பறிக்கும். தர மறுப்பவர்களுக்கு பரலோகப் பதவி வழங்கும். ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்று விட்டு அவர்கள் வழியில் கைகளைத் தட்டிக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.
அதையெல்லாம் தட்டிக்கேட்க ஆப்கானிஸ்தானில் நிலையான அரசு கிடையாது.
பாகிஸ்தானுக்கு அது பெரிய இழப்பாகவே இருந்தது.
ஆப்கானிஸ்தானின் நிழலை மிதிக்கக்கூட பாகிஸ்தான் டிரைவர்கள் அஞ்சும் நிலை இருந்தது. பொருளை இழந்தால்கூட சம்பாதித்து விடலாம். உயிரை இழந்து விட்டால் என்ன செய்யமுடியும்.
அதை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெனாசிர் பூட்டோ ஐ.எஸ்.ஐ. இயக்குநருடன் கலந்து ஆலோசித்தபோது ஓமர் பற்றி அவர் குறிப்பிட்டார்.
மக்களின் ஆதரவு பெற்றவர் ஓமர். அவருக்கு பதவி வெறியோ, பண வெறியோ கிடையாது. மதத்தின் மீது அபாரமான பற்றுதல் அவருக்கு உண்டு. ஷரியத் வழியில் ஆட்சி செய்ய விரும்பும் அவர்தான் நமது சரியான தேர்வு. அவர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவதற்கு நாம் உதவி புரிந்தால் நம்முடைய பிரச்சனைகள் அத்தனையும் தீர்ந்துவிடும்.
பெனாசிர் பூட்டோ அதற்கு சம்மதித்தார். அதன்பின்னர் காரியங்கள் மளமளவென்று நடந்தேறின. மின்னல்வேகம் என்பார்களே அதுபோல்தான் காரியங்கள் நடந்தன.
தாலிபான்களுக்கு பலவிதமாக பல ரகங்களில் உள்ள ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தது ஐ.எஸ்.ஐ.
எப்படிச் சுடுவது? எப்படித் துரத்துவது? எப்படி குண்டுவைப்பது? எதிரிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது எப்படி? என்று பல்வேறு விஷயங்களில் நுணுக்கமான பயிற்சியும் கொடுத்தது.
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாநிலத்தின் மேற்கு எல்லையில் இருந்த சாமன் என்ற இடத்தில்தான்  தாலிபான்களின் முதல் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டது.
தாலிபான்கள் மற்ற தீவிரவாத இயக்கங்களில் இருந்து சற்றே வேறுபட்டவர்கள். மற்ற இயக்கங்களில் தலைவர் என்று ஒருவர் இருப்பார்.
அதுபோல் தனியாக தலைவர் யாரும்  தாலிபான்களில் கிடையாது. பத்து பேர் கொண்ட நிர்வாகக் குழுதான் அத்தனை முடிவுகளையும் எடுக்கும். அதுவே அவர்களுக்கு ஆணையிடும். உத்தரவுகள் பிறப்பிக்கும்.
அதேபோல் தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக முடிவெடுத்தபோது அவர்கள் மதரஸாக்களைத்தான் குறி வைத்தார்கள். அதுதான் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
சராசரியாக இருபது வயதையுடைய மாணவர்கள்தான் அவர்களின் இலக்கு. அந்த வயதுகளில் கண்ணில் பட்ட அத்தனை பேரையும் அள்ளிக் கொண்டு வந்தார்கள்.
ஒருவேளை மட்டும் மதப்பாடம், அதுதவிர மற்ற  நேரம் எல்லாம் இராணுவப் பாடம்,ஓமரே தன்னுடைய இயக்கத்தில் நடைபெறும் பயிற்சிகளுக்கான பாடத் திட்டங்களைத் தன் கைப்படத் தயாரித்து அளித்தார். அது மிகவும் சிறப்பாகவே இருந்தது.
தாலிபான் என்ற புஷ்து மொழிச் சொல்லுக்கு மாணவர் என்று அர்த்தம். அந்தப் பெயரே கடைசியில் இயக்கத்தின் பெயராகவும் நிலைத்துவிட்டது.
இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும்போது ஓமர் மூன்று விஷயங்களைக் கவனிப்பது வழக்கம்.மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
இஸ்லாமியராக இருக்க வேண்டும். அதிலும் சன்னி பிரிவைச் சேர்ந்தவராக இருப்பது மிகவும் முக்கியம். அதிலும் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பது மிகமிக முக்கியம்.
பொதுவாக தீவிரவாத இயக்கங்கள் பின்னர் போராளி இயக்கங்களாக மாற்றமடைந்து ஆட்சியைப் பிடித்த கதைதான் உலகெங்கும் உண்டு.
ஆனால் அதிலும் தாலிபான்கள் வித்தியாசமானவர்கள். போராளிகளாகவே உலகிற்கு அறிமுகமானார்கள். பின்னர் ஆட்சியைப் பிடித்து தற்போது உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகளாக அடையாளம் காணப்படுகிறார்கள்.
பயிற்சிகள் ஜரூராக நடைபெற்றன. அமெரிக்காவின் ஆதரவும், ஆசிர்வாதமும் இருந்ததால் ஆயுதங்களும் பாகிஸ்தான் வழியாக தாலிபான்களுக்கு வந்து சேர்ந்தன.
மக்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவும் உண்டு. ஆயுதங்கள் ஏராளம். பணமோ தாராளம். அப்புறமென்ன? அடுத்த ஆபரேஷனைத் தொடங்க வேண்டியதுதானே!
மிகவும் ஆரவாரமாக கந்தஹாரை நோக்கி அவர்கள் புறப்பட்டனர். வழியெங்கும் ஆற்றில் இறங்கப்போகும் கள்ளழகரை வரவேற்பதுபோல் மக்கள் அவர்களை வரவேற்றார்கள். தங்களிடமிருந்த பணம், பொருள், நகை, நட்டு என்று அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.
பல கிராமங்களில் தாலிபான்கள் தங்குவதற்கான கூடாரங்களைக்கூட  மக்களே அமைத்துக் கொடுத்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர்கள் குறி வைத்திருந்தால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு இந்த அளவிற்கு கிடைத்திருக்காது.மொத்த ஆப்கானிஸ் தானத்தையும் தங்கள் வசம் கொண்டுவர அவர்கள் போராடியதுதான் மக்களின் ஆதரவுக்குக் காரணமாக அமைந்தது.
போராளிகளுக்கு அப்படியொரு வரவேற்பு அதற்கு முன்பும், பின்னரும் கிடைத்ததாக வரலாறு கிடையாது.
அமெரிக்கா வாரி வழங்கிய புத்தம் புதிய பீரங்கிகள் அவர்கள் வசம் இருந்தன. கந்தஹாரை எளிதாக சொடக்குப் போடும் நேரத்தில்  பிடித்து விட்டார்கள்.
முல்லா முகமது ஓமர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பாகிஸ்தானிலும் அதே பெயரில் ஏராளமான ஆயுதக் குழுக்கள் உருவாகத் தொடங்கின. அவற்றில் தெக்ரீக்-இ-தாலிபான், அல்-கொய்தா தாலிபான் போன்றவை முக்கியமானவை.

தெக்ரீக்-இ-தாலிபான்  2007 ஆம் ஆண்டு 13 ஆயுதக் குழுவினர் இணைந்து உருவான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக